தியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இறைதூதர் நபிகளின் தியாகத்தை போற்றும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் தமழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று சிறப்பு தொழுகைகள் நடத்தி பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், இனிப்புக்களை பரிமாறியும் இஸ்லாமியர்கள் தங்களின் அன்பையும், கருணையையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டூள்ள வாழ்த்துச் செய்தியில், பரிவு, சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் உண்மையான உணர்வை வலுப்படுத்துவதன் மூலம், ஒரு குடும்பமாக, அமைதியான, இணக்கமான இந்தியாவை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு” என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, மனிதநேயத்தை இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இஸ்லாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளை கொண்டாடி அன்பை பரிமாறிக்கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் கருணை காட்டிடவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஈகை குணம் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும், விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிடவேண்டும் என்று மனதார வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா