சீனாவில் பெய்துவரும் கனமழை காரணமாக, 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள் ளனர்.
சீனாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மத்திய ஹெனான் மாகாணம் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மஞ்சள் மற்றும் ஹைஹே நதிகளில் வெள்ளம் கரைபுரண்டதால், நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தததில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
மழை காரணமாக பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பேருந்து ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் ரயில்களை நாடினர். இதில் சுரங்க ரயில் பாதையில் சிக்கிக்கொண்ட ரயிலில் பயணிகள் 12 பேர் வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மழை காரணமாக, Gongyi மற்றும் Zhengzhou ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. இந்த நகரங்கள் வெள்ளத்தில் மிதப்பதாகவும் மக்கள் நெஞ்சளவு தண்ணீரில் மிதந்து மீண்டதாகவும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மூவாயிரம் ராணுவ வீரர்கள், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.








