இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு: 13 பேர் பலி, விமானங்களுக்கு எச்சரிக்கை

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 98 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவில் உள்ள மிகப்பெரிய மலை செமுரு. இந்த எரிமலை சனிக்கிழமை திடீரென்று வெடித்துச் சிதறத்…

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 98 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவில் உள்ள மிகப்பெரிய மலை செமுரு. இந்த எரிமலை சனிக்கிழமை திடீரென்று வெடித்துச் சிதறத் தொடங்கியது. வான் உயரத்தில் புகைக் கிளம்பியதை அடுத்து லுமாஜங்க் மாவட்டத்தில், மலையின் கீழ் பகுதியில் உள்ள சுமார் 11 கிராமங்கள் எரிமலை சாம்பலால் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர். அவர்கள் அங்கிருந்து வெகு தூரம் தப்பிச் சென்று மசூதியில் தஞ்சமடைந்துள்ளனர். சுமார் 900 பேர் அங்கு தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எரிமலையைச் சுற்றி 5 கிலோமீட்டர் பரப்பை தடை செய்யப்பட்ட பகுதியாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட புகை, 15,000 மீட்டர் உயரம் வரை பரவும் என்பதால் விமான சேவை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள், 13 பேர் உடல்களை மீட்டுள்ளனர். இதை அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்புப் படையில் செய்தி தொடர்பாளர் அப்தில் முஹாரி தெரிவித்துள்ளார். 98 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர் என்றும் இதில் 41 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூடான சாம்பல்கள், அருகிலுள்ள கிராமத்தை சூழ்ந்து கொண்டதாகவும் எரிமலைக் கழிவுகளால் கிராமம் நிரம்பி இருப்பதாகவும் இதனால் அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். எரிமலை வெடிப்பின்போது தப்பி ஓடியவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.