சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை மருத்துவ கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்க முன்வர வேண்டும், மருத்துவமனை திறப்பு விழாவில் அமைச்சர் ம.சுப்ரமணியன் கோரிக்கை.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் மகப்பேறு மருத்துவ பிரிவு கட்டிடம், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 1.30 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத் திறப்பு விழாவானது மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் கட்டடத்தைத் திறந்து வைத்தார். மேலும் வாய்மேடு மற்றும் பாலக்குறிச்சியில் கட்டப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்களையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறையின் சார்பில் 200 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது பேசிய அமைச்சர் ம.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை சார்பில் கிராமப்புறங்களில் தேவையான மருத்துவ கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்குத் தேவையான மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்ற துறைக்குத் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்குவது போல் சுகாதாரத் துறைக்கும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.






