அஸ்ஸாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மேலும் 8 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்தது.
இதுகுறித்து பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 2 பேரும், ஹைலாகன்டி மாவட்டத்தில் ஒருவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 500 அதிகமான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதி மற்றும் அதன் துணை நதிகளில் வெள்ளம் அபாய நிலையைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
பஜாலி மாவட்டத்தில் 173 கிராமங்கள் வெள்ளப் பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நல்பாரி மாவட்டத்தில் வெள்ளத்தால் 1.23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
காமரூப் மாவட்டத்தின் ரங்கியா நகரில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராணுவமும் தேவையான உதவிகளை செய்யத் தயாராக உள்ளது” என்றார்.
பிரதமர் மோடியும் அஸ்ஸாமுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
-மணிகண்டன்








