பற்களை பிடுங்கிய ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

அம்பா சமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பற்களை  பிடுங்கிய விவகாரத்தில்  ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி…

அம்பா சமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பற்களை  பிடுங்கிய விவகாரத்தில்  ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக
பணியாற்றி வருபவர் பல்வீர் சிங் இவர் சிறிய குற்றங்களில் ஈடுபடும் நபர்களை
காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு
மட்டுமல்லாமல் வாயில் ஜல்லி கற்களை போட்டு அடித்து பற்களை பிடுங்குவதை
வழக்கமாகக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதனால் பத்திற்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு வருவாய்த்துறையில்  அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இந்த  புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவுப்படி உட்கோட்ட நடுவர் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பாதிக்கப்பட்ட லட்சுமி சங்கர், சுபாஷ், வெங்கடேஷ் ஆகிய மூன்று நபர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக சம்மன் கொடுக்கப்பட்டு அவர்கள் இன்றே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. அவர்கள் சார் ஆட்சியர் சபீர் ஆலத்திடம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து
எடுத்துரைத்தனர். இதனிடையே விசாரணையை அறிந்து கொள்ள காவல்துறை துணை கண்காணிப்பாளர் பரன பாஸ் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 3 நபர்களின் வழக்கு தொடர்பான ஆவணங்களை கல்லிடைகுறிச்சி போலீசார் சேரன்மகாதேவி சார் ஆட்சியரும் விசாரணை அதிகாரியுமான சபீர் ஆலத்திடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அம்பை சரக்கத்திற்கு புதிய சரக காவல்துறை கண்காணிப்பாளராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை சட்டப் பேரவை கூட்டம் கூடியதும் எதிர்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..

“ விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் காவல்நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களை அரசு  ஒருபோதும் அனுமதிக்காது. இது தொடர்பாக காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங்கை  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.