என்எல்சி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை திமுக தெரிவித்து வருவதாக அதிமுக எம்.எல்.ஏ., அருண்மொழி தேவன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூரில் அதிமுக முன்னாள் எம்.பி.யும் புவனகிரி எம்.எல்.ஏ.,வுமான அருண்மொழி தேவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அவர் பேசியதாவது;
என்எல்சி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்த திமுக அரசுக்கும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கண்டனம் தெரிதுக்கொள்கிறேன். ,முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது தேர்தல் அறிக்கையில் என்எல்சிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படாது என வாக்குறுதி அளித்ததோடு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்எல்சி பிரச்சனை தீர்க்கப்படும். ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், நிரந்தர வேலையும் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் தற்போது அதற்கு உண்மைக்கு நேர்மாறாக செயல்படுகிறது.
தொடர்ந்து வளையமாதேவி பகுதியில் தற்போது என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகள் மேற்கொள்ளும் இடத்தில், விவசாயிகளுக்கான எந்த ஒரு இழப்பீடும் வழங்கப்படவில்லை. காவல்துறையைக் கொண்டு தமிழக அரசு அடக்கு முறையை ஏவி விட்டுள்ளது. பாஜக அரசுக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் தொடர்ந்து
எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக அரசு என்எல்சி விவகாரத்தில் மட்டும் அதற்கு ஆதரவு தருவது ஏன்? என்று தெரியவில்லை. என்எல்சி விவகாரத்தில் திமுக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து விட்டது.
மேலும் என்எல்சி நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதனையும் மீறி பணிகளை துவங்கி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து என்எல்சி விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து உண்மைக்கு மாறான தகவலை திமுக அரசு மேற்கொண்டு வருவதை இதோடு நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அருண்மொழி தேவன் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா