மீனவர்கள் கைது; முதலமைச்சர் எழுதிய அவசர கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச்…

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (3-7-2022) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இன்று (4-7-2022) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 15-6-2022 அன்று முடிவடைந்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம், தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதோடு, மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.