கன்னியாகுமரி மாவட்டம், கருங்கலில் திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில் இராணுவ வீரர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பிச்சவிளை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (32). இந்திய எல்லை பாதுகாப்பு படையில் ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து வந்த இவர் தனது திருமணத்திற்காக ஒரு மாத விடுப்பில் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி சொந்த ஊர் வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த 21ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், விடுமுறை முடிந்து நாளை பணிக்குத் திரும்ப இருந்த சரவணனுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதில், சுயநினைவை இழந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக கருங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சரவணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான 25 நாட்களே ஆன நிலையில் மணமகன் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








