தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவால், வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இலவச திரைப்படங்கள், வெப்சீரிஸ், இலவச ஓ.டி.டி சேவைகள் வழங்குவதாகக் கூறி இயங்கும் அங்கீகாரமற்ற (PIRATED) திரைப்பட மற்றும் ஸ்ட்ரீமிங் செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த செய்தியில் “அங்கீகாரமற்ற செயலிகளை மூன்றாம் தரப்பு இணையதளங்களில் (Third-Party Wepsites), மூலம் பகிரப்படுகின்றன. இவற்றை நிறுவும்போது மொபைல் சாதனங்களில் அடிப்டையாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் செயலிழக்க செய்யப்படுகின்ற காரணத்தால், இதனை பயன்படுத்துபவர்கள் கடுமையான சைபர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய சட்டபூர்வமான அங்கிகாரம் இல்லாத செயலிகளை பயன்படுத்துவதன் மூலம், பயனாளர்களின் தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள தொடர்புகள், புகைப்படங்கள், செய்திகள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு திருடப்பட்ட தகவல்களை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் டிஜிட்டல் கைது. போலி முதலீட்டு, போலி வேலைவாய்ப்பு போன்ற மோசடி குற்றச்செயல்களை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. மேலும், வங்கி மற்றும் நிதி தொடர்பான விவரங்கள் திருடப்பட்டால், பண இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
சட்டபூர்வமான அங்கிகாரம் இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்தல், பகிர்தல் அல்லது பயன்படுத்துதல் சட்ட விரோதமான செயலாகும், இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. இத்தகைய சட்ட விரோதமான தளங்கள் எந்த விதமான ஒழுங்குமுறையும் இன்றி செயல்படுகின்றன. மேலும் இவை மொபைல் சாதனங்களின் ‘Settings’ அமைப்புகளை தவறாக பயன்படுத்தி தேவையற்ற அனுமதிகளை (Permissions) பெற்று, அந்த சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள முக்கிய தரவுகளை சம்மந்தப்பட்ட நபர் அறியாமலேயே திருடுகின்றன. ஆகவே, பாதுகாப்பான அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மற்றும் தளங்களை மட்டும் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அதில் “மூன்றாம் தரப்பு இணையதளங்கள், டெலிகிராம், சமூக ஊடகங்களில் இருந்து திரைப்பட ஸ்ட்ரீமிங் ஆப்களைப் பதிவிறக்க செய்ய வேண்டாம். Install Unknown Apps’என்ற பெர்மிஷன்-ஐ உங்கள் செல்போனின் ‘செட்டிங்ஸ்’களில் அனுமதிக்காதீர்கள். உங்கள் மொபைலில் ஏற்கனவே அமைந்துள்ள பாதுகாப்பு அம்சங்களை மாற்ற வேண்டாம்.
‘இலவச திரைப்படங்கள்’. ‘இலவச OTT’ ‘சந்தா இன்றி பிரீமியம் என்று உறுதியளிக்கும் செயலிகளை(Apps) தவிர்க்க வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான, நம்பகமற்ற பாப்அப் விளம்பரங்களை கிளிக் செய்யாதீர்கள். கூகுள் பிளே ஸ்டோர். ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள அதிகாரப்பூர்வ OTT தளங்களை மட்டும் பயன்படுத்தவும். தெரியாத லிங்க்களைக் கிளிக் செய்து அங்கீகாரமற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்தல், பயன்படுத்துதல் குற்றசெயலாகும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
இறுதியாக அந்த செய்தியில் ”நீங்கள் ஏதேனும் இணையவழி குற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று சந்தேகித்தால் அல்லது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்தால், உடனடியாக இணையவழி குற்ற உதவி எண் 1930 ஐ தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது http://www.cybercrime.gov.in இல் புகார் அளிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








