அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக ஆட்சிக் காலத்தில் டிஎன்பிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் காலியாக இருந்த 18…

அதிமுக ஆட்சிக் காலத்தில் டிஎன்பிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இதில் 4 பணியிடங்கள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கும்,  மற்ற 14 பணியிடங்கள் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்த ஒதுக்கீட்டில் முறையான இன சுழற்சி முறை பின்பற்றப்படாமல் பணி நியமனங்கள் வழங்கப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில்,  அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட தேர்வர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும்,  அவர்களுக்கான இடஒதுக்கீடு ஆசிரியர் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டதாகவும்,  உரிய இன சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதையும் படியுங்கள் : அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து வழக்கு – ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

இந்நிலையில்,  இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா,  கடந்த 2020-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பணி நியமன பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார்.  மேலும், 4 வாரத்திற்குள் முறையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி,  புதிதாக மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட உத்தரவிட்டு, வழக்கினை முடித்து வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.