உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: குடியரசு தலைவருக்கு திமுக எம்.பி கடிதம்

உச்சநீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நீதிபதிகள் நியமனம் அமைய வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,…

உச்சநீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நீதிபதிகள் நியமனம் அமைய வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், உச்சநதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஒரு சீரான முறைகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் அதிக நீதிபதிகளை கொண்டிருந்தாலும் அந்த குறிப்பிட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதாரணமாக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 37 நீதிபதிகள் மட்டுமே இருக்கக்கூடிய சூழலில் இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர். அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில், 75 நீதிபதிகள் இருந்தும் ஒரே ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி மட்டுமே உள்ளார். எனவே விகிதாச்சார அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும்போது, மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் நியமனங்கள் இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்

.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுவது அத்தியாவசியமாகிறது, எனவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யும் போது சமூகநீதியை கடைபிடிக்கவும் மாநிலங்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதை உறுதி செய்யவும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனவும் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.