கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள வழிமுறைகளின்படி , தகுதியான
ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்துள்ள மனுவில், 2ஆம் நிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்கப்படவில்லை. இந்நிலையில், பள்ளி நிர்வாக குழு மூலம் ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிக்கு முரணாணது என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், மனுதாரர் தரப்பில், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று பல ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாமல் ஆயிரக்கணக்கானோர் உள்ள நிலையில் தகுதி அடிப்படையில் இல்லாமல் இந்த நியமனம் நடைபெறுகிறது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, அரசு தரப்பில் பள்ளிக் கல்வித் துறையின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திருத்தம் செய்யப்பட்ட தகுதி நிபந்தனைகள் தெளிவுபடுத்தப்பட்டிருந்து. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அதேநேரத்தில் வட மாவட்டங்களில் சிலவற்றில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்
இல்லை என வாதிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,
தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் தயாராகி வருகிறது.
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பட்டியல் வரும் பிப்ரவரி இறுதியில் வெளியிடப்படும் என்றார்.
இதைத்தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி, தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில்வெற்றி உள்ளிட்ட தகுதியுடன் வரும்
விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கும் பணியை நடத்தலாம்,
பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்களின் விண்ணப்பங்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில்
பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பங்கள் மீது
முடிவெடுக்கக் கூடாது. பள்ளிக் கல்வி இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அந்த விண்ணப்பங்கள் பள்ளி நிர்வாக குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும். அந்தக் குழு பள்ளிக் கல்வி இயக்குனரின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள், சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த நியமனங்கள் தற்காலிகமானதுதான், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி, தகுதியானவர்களுக்கு மட்டும்தான் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும். இந்த நியமனங்கள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என்றும், மேலும்
வழக்கு தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்
உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-ம.பவித்ரா