மக்களை திசை திருப்பவே திமுக அரசு எதிர்கட்சியினர் மீது லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் தளவாய் சுந்தரம்
ஆகியோர் சென்னை அடையாரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை பார்வையிட்னர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஜெயக்குமார், விடியாத அரசு தவறாமல் செய்யும் ஒரே வேலை ரெய்டு. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயலை முடிக்க வேண்டும் என்று செயல்படுகிறது. நாட்டில் பல பிரச்சனை உள்ளது. ஆன்லைன் ரம்மி, கொலை கொள்ளை, அடிப்படை கட்டமைப்பு பிரச்சனை என்று சிங்கார சென்னையை சீர்கேடான சென்னையாக மாற்றி வருகிறார்கள் என்று சாடினார்.
பஸ் கட்டணம், பால் கட்டணம், சொத்து வரி, மின் கட்டணம் என்று பல்வேறு கட்டண உயர்வு பிரச்சனையை பேச விடாமல் திசை திருப்ப இந்த ரெய்டு நடத்தப்படுகிறது.
மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்கள் பாதிக்க படுவார்கள். இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் அறிவித்தார். எப்பொழுது எல்லாம் அதிமுக போராட்டம் அறிவிக்கின்றார்களோ அப்பொழுதெல்லாம் திமுக அரசு இப்படி ரெய்து நடத்துகிறது. அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வீட்டு திருமணம் போல நடைபெற்றது. இவர்கள் செல்வந்தவர்களா என்று கேள்வியெழுப்பினார்.
விஜயபாஸ்கர் மீது போடப்பட்ட வழக்கைப் பொருத்தவரை மத்திய அமைச்சர் தான் இதற்கு சீட்டு வழங்கினார். முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கரன் பங்கே இதில் கிடையாது. இதற்கு essential certificate வழங்குவது தான் மாநில அரசின் வேலை. இதற்கு இறுதி கையெழுத்து இந்திய அரசாங்கம் தான் வழங்க வேண்டும். மாநில அமைச்சருக்கு பங்கே இல்லை என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சோதனையானது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நடத்தப்படுவது, என்றும் இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை என்றும் குற்றம்சாட்டிய அவர் ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தினார்கள். ஆனால் எந்த ஆவணமும் கைப்பற்ற முடியாத நிலையில், இன்று மீண்டும் புதிதாக வழக்குகளை இவர்கள் மீது போடப்பட்டு சோதனைக்கு என்ற பெயரிலேயே இந்த அரசு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி ஒழிக்கலாம் என்றும் நினைப்பதாக அவர் கூறினார்.
மக்களை திசை திருப்புவதற்காகவே இது போன்ற சோதனைகளை நடத்துவதாக குற்றம்
சாட்டினர். திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களிலேயே அனைத்து விலைவாசியும் உயர்ந்திருக்கிறது. முதலமைச்சருடைய குடும்பத்தை சேர்ந்த நிறுவனங்கள் இன்றைக்கு கொள்ளை அடித்து பட்டா போட்டுக் கொண்டிருக்கிறது என்றும் இன்றைக்கு விஞ்ஞான ரீதியாக கொள்ளையடிக்க உலகத்திலேயே திமுகவை வெல்ல ஆளே இல்லை என்றும் விமர்சனம் செய்தார்.







