இன்று காலை ஓபிஎஸ் ஐ சந்தித்த அண்ணாமலை நண்பகலுக்கு பின் ஈரோடு இடைத் தேர்தல் தொடர்பான தங்களது முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து போட்டியிடுகின்றன. அதிமுக இரு அணிகளாக பிரிந்து போட்டியிடுகின்றது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தார். ஓபிஎஸ் அணியில் அவரது தீவிர விசுவாசியான செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த தேர்தல் தொடர்பாக பாஜக தனது நிலைபாட்டை இதுவரை அறிவிக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கபப்டவில்லை.
நேற்று அவசர பயணமாக தமிழக பாஜக தலைவர் டெல்லி சென்றார். டெல்லியில் இருந்து திரும்பியவுடன் முதலாவதாக எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்துள்ளார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தையும் அண்ணாமலை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகிருந்தது. இருவரையும் இணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் பாஜக வின் தமிழக பொறுப்பாளரான சி.டி.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஓபிஎஸ் ஐ சந்தித்தனர். இதன் பின்னர் ஈரோடு இடைத் தேர்தலில் தங்களது முடிவு தொடர்பாக நண்பகளுக்கு பின் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
– யாழன்