தேர்வு எழுத வந்த பள்ளி மாணவர் மாரடைப்பால் மரணம்

12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வந்த 17 வயது மாணவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி மாவட்டம் கம்மவாரிபள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த யெகொல்லு வெங்கட…

12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வந்த 17 வயது மாணவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி மாவட்டம் கம்மவாரிபள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த யெகொல்லு வெங்கட சதீஷ் என்ற மாணவர், அருகில் உள்ள குடுரு நகரில் ஸ்ரீ ஸ்வர்னாந்தர பாரதி ஜூனியர் கல்லூரியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஆண்டு இறுதித் தேர்வு எழுதுவதற்காக தனது கிராமத்தில் இருந்து மாணவர் யெகொல்லு வெங்கட சதீஷ், தனது பள்ளிக்கு வந்துள்ளார். தேர்வு மையத்துக்கு அவர் வந்தபோது, அந்த வளாகத்தில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

அப்போது மாணவர் யெகொல்லு வெங்கட சதீஷ்-க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, வியர்த்து கொட்டியுள்ளது. இதனால், மிகவும் சோர்வடைந்த அவர், தனக்கு நெஞ்சு வலிப்பதாக அருகில் இருந்த காவலரிடம் தெரிவித்துள்ளார்.

அவருக்கு மூச்சு விடவும் சிரமமாக இருந்ததை அடுத்து, அந்த காவலர் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் வர தாமதமான நிலையில், மாணவரின் நிலை மோசமாகிக் கொண்டிருப்பதை அறிந்த காவலர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் தங்கள் வாகனத்தில் மாணவர் யெகொல்லு வெங்கட சதீஷை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே மாணவர் உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து மாணவரின் பெற்றோர், மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அப்போது தங்கள் மகன் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து அலறி துடித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.