அன்பு ஜோதி ஆசிரமம் குறித்து முழு விசாரணை நடத்தி அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கப்படும் என மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா என்பவர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10ம் தேதி போலீசாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடத்தி வருவதும், ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது போன்ற அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
இதையும் படிக்கவும்: தடுக்கி விழுந்தால் செய்தியாகிறது- ஆளுநர் தமிழிசை நகைச்சுவை பேச்சு
இதனையடுத்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்ற பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று தேசிய மகளிர் ஆணையத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் கஞ்சன் கட்டார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் இன்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையக் குழுவினர் விசாரணை நடத்தினர். அன்பு ஜோதி ஆசிரமத்தினால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி, ஆணைய உறுப்பினர் சீதாபதி சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் பார்வையிட்டு நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி, பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தியதில் பெண்களை அடித்து துன்புறுத்தி இருப்பது மட்டுமல்லாமல் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி அதன் அறிக்கைகளையும், ஆசிரமத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளையும் முதலமைச்சரிடம் ஒப்படைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.