’ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படத்தை இணையதளத்தில் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி படக்குழுவினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
நந்தா பெரியசாமி இயக்கத்தில், சேரன், கவுதம் கார்த்திக், ஷிவாத்மிகா ராஜசேகர், ஜோ மல்லூரி, சினேகன், சரவணன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’ஆனந்தம் விளையாடும் வீடு’. சிந்துகுமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் நேற்று ( டிசம்பர் 24 ) திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தை சிலர் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, படத்தின் தயாரிப்பாளர் ரங்கநாதன், இயக்குநர் நந்தா பெரியசாமி, நடிகர் சரவணன் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.

பின்னர் அவர்கள் கூறும்போது, எங்களின், ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படத்தை, திருட்டுத்தனமாக டெலிகிராம், டோரன்ட் உள்ளிட்ட தளங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்தை அந்த இணையங்களில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் அளித்துள்ளோம்’ என்றனர்.







