கோவையில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்று வரும் கல்வி கண்காட்சியை பார்வையிட்டு பேசிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியூஸ் 7 தமிழுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கடந்த ஆண்டு கோவையில் நியூஸ் 7 தமிழ் சார்பில் கல்வி கண்காட்சி நடைபெற்றது. அக்கண்காட்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த ஆண்டும் கோவையில் கல்வி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கொடிசியா அரங்கில் வெகுவிமரிசையாக கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது.
நியூஸ் 7 தமிழின் இந்த கல்வி கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில், 40க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. மேலும், தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெறுவதற்கான அரங்குகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
கல்வி கண்காட்சி வாயிலாக உடனடி மாணவர் சேர்க்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி, மாணவர்கள் வசதிக்காக கோவையில் ஆர்ச் முதல் கொடிசியா அரங்கம் வரை நியூஸ் 7 தமிழ் சார்பில் இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கல்வி கண்காட்சியின் முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
சிறந்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சி வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். உயர்கல்வி குறித்த பல்வேறு தகவல்களை அறிந்துகொண்டதாக கூறிய மாணவர்கள், கண்காட்சியால் தங்களின் குழப்பம் தீர்ந்ததாக தெரிவித்தனர்.
இந்நிலையில், கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் கல்வி கண்காட்சியை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். கண்காட்சியில் இடம் பெற்று உள்ள கல்லூரிகளின் அரங்குகளைப் பார்வையிட்ட பின் நியூஸ் 7 தமிழ் கல்வி கண்காட்சியின் விளம்பரதாரர்களுக்கு அவர் நினைவுப் பரிசுகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
அதை தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் இந்த கல்வி கண்காட்சி கோவைக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் அமைந்து உள்ளது என்றார். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் இந்த பெருமைமிகு நிகழ்ச்சிக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.








