அம்மா சிமெண்ட் விநியோக முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் குந்தடம் ஊராட்சியில் அம்மா சிமெண்ட் விநியோகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க நிர்வாகி யோகேஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், போலி ஆவணங்கள் தயாரித்து சிமெண்ட் மூட்டைகளுக்கான தொகையை தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் செலுத்தியதாக புகாரளிக்கப்பட்டிருந்தது. உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது குந்தடம் வட்டார வளர்ச்சி அதிகாரி உள்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து அம்மா சிமெண்ட் விநியோக முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.







