மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக இதுவரை மத்திய அரசு ரூ.12.35 கோடியை மட்டுமே விடுவித்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு, தோப்பூரில் 224 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு நிதியை ஜப்பானை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இதற்காக முதல் கட்டமாக 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கட்டுமான பணிகள் தாமதமாகிய நிலையில், இந்த நிதியை அதிகரித்து ரூ.1,977 கோடியாக அறிவித்தது.மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் இதுவரையில் ரூ.12.35 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த தொகையாக உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.
உத்தரப்பிரதே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.832 கோடியில், ரூ.665 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆந்திரப்பிரதேசத்திற்கு ரூ.1,618 கோடியில் ரூ.1,289.62 கோடியும், மகாராஷ்டிராவிற்கு ரூ.1577 கோடியில் ரூ.1,218.92 கோடியும், மேற்குவங்கத்திற்கு ரூ.1,754 கோடியில் ரூ.1,362 கோடியும், உத்தரப்பிரதேசம் கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,011 கோடியில், ரூ.874.38 கோடியும், பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ.925 கோடியில், ரூ.788.62 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.1,471.04 கோடியில் ரூ.1,407.93 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டிமுடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன.