குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், பொது வேட்பாளராக யஷ்வந்த சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
பீகார் மாநிலம் பாட்னாவில் 1937-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி பிறந்த யஷ்வந்த் சின்ஹா. அரசியல் அறிவியலில் 1958-ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்ற பின், பாட்னா பல்கலைக்கழகத்தில் சில காலம் பேராசிரியராக பணியாற்றினார். பின்னர் குடிமைப்பணி தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். யஷ்வந்த் சின்ஹாவின் மனைவி நீலிமா சின்ஹா எழுத்தாளர், இவருக்கு சர்மிளா என்ற ஒரு மகளும், சுமந்த் சின்ஹா, ஜெயந்த் சின்ஹா என இரு மகன்களும் உள்ளனர். ஜெயந்த் சின்ஹா தற்போது பாஜகவில் எம்.பியாக உள்ளார். சுமார் கால் நூற்றாண்டுகள் ஐஏஎஸ் பணியில் பீகார் மாநில அரசிலும், மத்திய அரசிலும் பல்வேறு முக்கியப் பொறுப்புகளைப் பதவிக் காலத்தில் யஷ்வந்த் சின்ஹா வகித்திருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1980-ஆம் ஆண்டுகளில், பல இளைஞர்கள் மாநிலங்களிலும், தேசிய அரசியலிலும் புதிதாகத் தலைவர்களாக உதயமான காலம் அது. இளைஞர்களின் அரசியல் எழுச்சியைக்கண்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கு, அந்த வேட்கை அதிகமானது. அதனால், 1984 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஜனதா கட்சியில் சேர்ந்து பொதுச்செயலாளரானார். 1989-ஆம் ஆண்டு சந்திரசேகர் பிரதமராகப் பதவியேற்ற போது நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இணைந்தார்.
அண்மைச் செய்தி: ‘’விளையாட்டு நீண்ட ஆயுளைத் தரக் கூடியது’ – அமைச்சர் மெய்யநாதன்’
1999-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்த போது, பிரதமரான வாஜ்பாய், நிதியமைச்சராக யஷ்வந்த் சின்ஹாவை நியமித்தார். 2002-ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஷ்வந்த் சிங் நிதியமைச்சரான போது, யஷ்வந்த் சின்ஹா வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2004-ஆம் ஆண்டு பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது, முக்கிய பொறுப்புகளை வாஜ்பாயும், அத்வானியும் இவருக்கு அளித்தனர். நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். பீகார் மாநிலத்திலிருந்து 1989, 2004 என இரு முறை மாநிலங்களவை எம்பியாகவும், ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜாரியாபாக் மக்களவைத் தொகுதியிலிருந்து 1998,1999 மற்றும் 2009 என மூன்று முறையும் பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜகவில் வாஜ்பாய், அத்வானி ஆகிய மூத்த தலைவர்களின் காலத்திற்குப் பிறகு , இவருக்கு முக்கியத்துவம் குறைந்ததால் பாஜகவிலிருந்து வெளியேறினார். மோடி அரசின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, அதிகபட்ச ஜி.எஸ்.டி வரி விதிப்புகளைக் கடுமையாக விமர்சித்தார். பின்னர் திரிணாமூல் காங்கிரசில் சேர்ந்து துணைத்தலைவராகப் பதவி வகித்தார். தற்போது நாட்டின் உயரிய பொறுப்பான குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்றைய நிலையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் வாக்கு மதிப்பு 51 சதவீதமாக உள்ளது. நிதியமைச்சர்களாக இருந்து குடியரசுத் தலைவர்களாக ஆர்.வெங்கட்ராமன், பிரணாப் முகர்ஜி ஆகியோர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் பொது வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹா ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளார்.