அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கில், கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள உணவகங்களில் கடந்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வு நடத்தியதாகவும், அதில் 12 சதவீதத்திற்கும் மேலான உணவகங்கள் போதுமான அளவு தரத்துடன் செயல்படவில்லை என தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல உணவகங்களின் சமையலறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், உணவு தயாரிக்கும் போது உரிய சுத்தமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஓட்டல்களில் உணவருந்திய சிலருக்கு உணவு விஷமாகி இறந்த சம்பவங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகளின் சமையல் அறைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், உணவு சமைப்பதை வாடிக்கையாளர் பார்க்கும் வகையில் தொலைக்காட்சி வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோ அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவித்ரா, ஹோட்களில் தரமான சுகாதாரமான பாதுகாப்பான உணவு வகைகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், உணவுப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் முறையாக சோதனை செய்ய வேண்டும் என்றும், சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் வழக்கை விசாரித்து நீதிபதிகள், பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை பல ஹோட்டல்கள் செயல்பட்டு வரும் நிலையில், மனுதாரரின் கோரிக்கையில் சாத்தியமில்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.