அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக திறந்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் அனைத்து வீரர்களுக்கும் தங்ககாசு வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அவனியாபுரத்தை அடுத்து, பாலமேட்டில் நேற்று நடைபெற்ற போட்டியில், வாடி வாசலில் இருந்து அனல் பறக்க சீறி வந்த காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களின் கைகளில் சிக்காமல், உரிமையாளருக்கு பரிசுகளை வாங்கி கொடுத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இது உலக புகழ் பெற்ற போட்டி என்பதால், எதிர்ப்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இதனிடையே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நாளை வாடிவாசலில் இருந்து திறந்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்ககாசு வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.
அதேபோல், காளைகளை தீரத்துடன் அடக்கும் அனைத்து மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் தலா ஒரு தங்ககாசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர வெற்றி பெறும் காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பிலும், வெற்றி பெறும் வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சார்பிலும் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.