எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், எண்ணம் போல் வாழ்க்கை என்ற தனது கருத்துக்கு ஏற்றார் போல் கடந்து செல்பவர் நடிகர் அஜித்.
திரையுலகில் 30ஆம் ஆண்டில் அடியெடித்து வைத்ததையொட்டி, தனது உதவியாளர் மூலம் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், ரசிகர்கள், வெறுப்பாளர்கள், நடுநிலையாளர் ஆகிய 3 பேரும் ஒரு நாணயத்தின் 3 பக்கங்கள் என நடிகர் அஜித் கூறியுள்ளார்.
ரசிகர்களிடம் இருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடம் இருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் நியாயமான பார்வையையும் மனதார ஏற்றுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது தாரக மந்திரமான வாழு.. வாழ விடு என்பதை குறிப்பிட்ட நடிகர் அஜித், நிபந்தனையற்ற அன்பு எப்போதும் உண்டு என தெரிவித்துள்ளார்.
அஜித்தின் அறிக்கையில், இடம் பெற்றிருந்த வார்த்தைகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. நாணயத்திற்கு 3 பக்கங்கள் உள்ளதாக நடிகர் அஜித்குமார் கூறி இருப்பதே அதற்கு காரணம். நாணயத்திற்கு 2 பக்கங்கள்தானே இருக்கும்… 3வது பக்கம் எங்கு உள்ளது என்று கேள்விகள் பறக்க தொடங்கி இருக்கின்றன.
பூ, தலை என எதிர் எதிர் பக்கங்களாக இருக்கும் இரண்டு பக்கங்களும் ரசிகர்களின் அன்பு மற்றும் வெறுப்பாளர்களின் வெறுப்பு ஆகியவற்றை குறிப்பதாகவும், இரண்டு பக்கத்தையும் சாராமல் நாணயத்தின் நடுவில் இருக்கும் தடிமன் பகுதி நடுநிலையாளர்களின் கருத்துக்களை குறிப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டு தான் அஜித் கூறி இருப்பதாக அவர் ரசிகர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்கம்போல், இதனையும் சர்வ சாதாரணமாக நடிகர் அஜித் கடந்து செல்வார் என நிச்சயமாக கூறலாம்.








