மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற தனி விமானம் நேற்று விபத்தில் சிக்கியது. புனே மாவட்டம் பாராமதி பகுதியில் அஜித் பவார் சென்ற விமானம் நேற்று காலை 8.45 மணிக்கு தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட 3 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அஜித் பவாரின் சொந்த தொகுதியான பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக பாராமதியில் உள்ள அஜித் பவாரின் இல்லத்தில் இருந்து வித்யா பிரதிஸ்தான் திடலுக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட அவரின் உடலுக்கு சாலையின் இருபுறங்களிலும் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச் சடங்கில் அஜித் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவார், மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.







