இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நான்காவது நாளான இன்று இந்திய வீரர்கள் ஜடேஜா, ரஹானே, விராத் கோலி ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டை இழந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதனால், 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி, கடந்த 2ம் தேதி
தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸ்ஸை ஆடிய
இங்கிலாந்து அணி 290 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் சர்மா சிறப்பாக ஆடி சதம் அடித்தார். வெளிநாட்டு மண்ணில் அவர் அடித்த முதல், டெஸ்ட் சதம் இது. அவர்127 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமில் லாததால், முன்கூட்டியே ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது இந்தியா 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
கேப்டன் விராத் கோலி (22 ரன்), ரவீந்திர ஜடேஜா (9 ரன்) களத்தில் இருந்தனர். நான்காவது
நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வோக்ஸ்
பந்துவீச்சில் ஜடேஜா எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து விராத் கோலியுடன் துணை கேப்டன் ரஹானே இணைந்தார். நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹானேவை, வோக்ஸ் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழக்க செய் தார். பின்னர் விராத் கோலியுடன் ரிஷப் பண்ட் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில், மொயின் அலி பந்துவீச்சில் விராத் கோலி, ஓவர்டோனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 44 ரன்கள் எடுத்திருந்தார்.
பின்னர் ஷர்துல் தாகூர், ரிஷபுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர். 113 வது ஓவர் வரை இந்திய 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இதன் மூலம் இந்திய அணி 215 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.









