‘அக்னிபாத்’ திட்டத்திற்கு நாடு முழுவதும் 7 மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எதிர்ந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் விமானப் படையில் ஆட்சேர்ப்பு இம்மாதம் 24ம் தேதி முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
17 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைப்படுவார்கள். இந்த திட்டத்திற்கு அக்னி பாதை (அக்னிபாத்) என பெயரிடப்பட்டது. ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளமான டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் சேர்ப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இளைஞர்கள் அனைவரும் தேவையான முன்தயாரிப்பில் ஈடுபட வேண்டும். இதுவொரு பொன்னான வாய்ப்பு ஆகும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களாக சேருவதற்கு வயது வரம்பு 21-இல் இருந்து 23-ஆக உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வரும் 24ம் தேதி முதல் இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடைபெறும் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக இதுவரை 316 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல அரியானா மாநிலத்தில் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இணைய வசதியை மாநில அரசு துண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.