எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் துவங்கிவிடும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரையில் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, அவர் செய்தியாகளுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் துவங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு தமிழக சுகாதாரத் துறையிடம் விவரங்களைச் சேகரித்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் டிசம்பர் மாதம் எலும்பு வங்கி 40 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்டது.
இந்நிலையில், மதுரையில் திறக்கப்பட்ட வங்கியில் 36 எலும்புகள் பெறபட்டுள்ளன.
இறந்த இரண்டு நபர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் மூலம் 7 பேர் பயனடைந்துள்ளனர். போலீஸ் மற்றும் விளையாட்டு வீரர்கள் இந்த சிகிச்சை மூலம் பயனடைந்துள்ளனர். உசிலம்பட்டி பகுதியில் 1 கோடி மதிப்பில் 4 துணை சுகாதார நிலையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென்னகத்தின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் இடம். திமுக ஆட்சிக்கு வந்த உடன் பல்வேறு கூடுதல் வசதிகள் இங்கு செய்யபட்டுள்ளன. கொரோனா தாக்கத்தில் இருந்து தமிழகம் மோசமான சூழலில் இருந்து மீண்டுள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. தடுப்பூசி போடுவதில் தமிழகம் நல்ல நிலையை எட்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 96,807 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 3,185 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு இதுவரை 87 கோடியே 34 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டண படுக்கை மையம் அமைக்கப்பட உள்ளது. கடந்த ஆட்சியின்போது நாள்தோறும் 61 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது நாள்தோறும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை முதல் தவணை 95.95 சதவீதமும், 2ம் தவணை 88.52 சதவீதமும்
செலுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 86.20 சதவீதமும், 2ம் தவணை 75.02 ஆக உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெரு நகரங்களில் மதுரை பின்தங்கிய நிலையில் உள்ளது. மதுரையில் தடுப்பூசி சதவீத குறைபாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பெரு நகரங்களில் மதுரை பின்தங்கிய நிலையில் உள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் 30,35,680, 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் 92,14,707, பூஸ்டர் தடுப்பூசி 3 கோடியே 40 லட்சம் பேர் செலுத்த வேண்டியுள்ளது. வரும் 7ம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டட வடிவமைப்பிற்கான டெண்டர் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் வரைபடம் தயாரித்து எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் துவங்கிவிடும் என்றார்.
-ம.பவித்ரா








