சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப திமுக இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். இதற்கு ஆரம்ப நிலையிலேயே அதிமுக எதிர்ப்பு தெரிவிப்பதாக முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
இதனிடையே சட்டப்பேரவையில் எம்எல்ஏ கோவிந்தசாமியை தரக்குறைவாக பேசியதாக அமைச்சர் பெரியகருப்பனின் பேச்சைக் கண்டித்து பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டமன்றத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அமைச்சரே எழுந்து மரியாதைக்குறைவான வார்த்தைகளை பேசினால் அது அவை மரபுக்கு உரியது தானா எனக் கேள்வி எழுப்பினார்.
பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டினார்.
பல்வேறு கட்டங்களில் பேசப்பட்ட சட்ட மசோதாக்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்ட அவர், அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கென தனி அதிகாரம் உள்ளதால், அதற்குட்பட்டுதான் அவரால் செயல்பட முடியும் என சுட்டிக்காட்டினார். மேலும், அதிமுக உறுப்பினரை கடுமையாக பேசிய அமைச்சரை, முதலமைச்சர் கண்டிக்காததால் வெளிநடப்பு செய்ததாக ஓபிஎஸ் தெரிவித்தார்.







