அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அதிமுகவுக்கு மாற்று பாரதிய ஜனதா கட்சி அல்ல, அதிமுகவை பாஜகவுடன் ஒப்பிடுவதே தவறு. திமுக அல்லது அதிமுக தான் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும். தமிழ்நாட்டு அரசியலில் அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும். இல்லை என்றால் பிரதான எதிர்க்கட்சியாக மட்டும்தான் இருக்கும்” என்று கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சசிகலாவின் உறவு முறிந்து போய்விட்டது எனவும், அவர் பாஜகவில் சேரலாம் இல்லை என்றால் வேறு எந்தக் கட்சியிலும் சேரலாம் என்றும் கூறிய அவர், “ஊடகங்கள்தான் சசிகலா குறித்து பேசுகின்றன. கட்சியில் இல்லாத ஒருவர் குறித்து நாங்கள் எப்படி பேச முடியும். அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. நானும் இருக்கிறேன் என்பதை வெளிக்காட்டுவதற்காக சசிகலா பேசி வருகிறார்” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்தாலே மின்வெட்டு வந்துவிடும் என்பது இயல்பு. மின்வெட்டையும் திமுகவையும் பிரிக்க முடியாது. மின்துறை அமைச்சர் துறை குறித்து புரிதல் இல்லாமல் செயல்பட்டு வருகிறார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. இரட்டைத் தலைமை நன்றாக சென்று கொண்டு உள்ளது” என்றார்.