அதிமுகவில் ஒற்றைத் தலைமை குரல் ஓங்கியுள்ள நிலையில், கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்யத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார், ஆதித்தன், சுரேன், பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்யத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்படுள்ள புதிய மனுவில், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களைக் கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தடை விதிக்க கோரி கூடுதல் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், கட்சி விதிகள் படி நிர்வாகரீதியாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களான பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல் மற்றும் உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றை அதிமுக கட்சி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்தத் தடை விதிக்கக் கோரப்பட்டுள்ளது. மேலும், கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரத் தடை விதிக்க வேண்டும் எனவும், செயற்குழுவால் நியமிக்கப்பட்ட தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பதவியில் நீடிக்கத் தடை விதிக்கவும், கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதியதாகக் கட்சி பதவிகளில் நியமனம் செய்யத் தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த இடைக்கால மனுக்களில் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.









