மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க வங்கிகிகள் மறுத்தால், மாணவர்களோ, கல்வி நிறுவனங்களோ எங்களிடம் கூறுங்கள் நாங்கள் பெற்று தருகிறோம் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.
மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் பிரபல கல்லூரிகளின் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட “கல்வி கண்காட்சி” கோவை கொடிசீயா மைதானத்தில் இன்று தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இக்கண்காட்சியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் பிரபலமான 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள்,தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்றுள்ளன. சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் சமீரன், நாடாளுமன்ற உறுப்பினர் நடரசன், ஐபிஎஸ் அதிகாரி ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
கண்காட்சியை தொடக்கி வைத்து பேசிய நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் தியாகசெம்மல், கொரோனா, வெள்ளம், பேரிடர் காலங்களில் நிறுவனம் செய்த நிவாரண உதவிகளை நினைவுகூர்ந்த அவர், ஆண்டுதோறும் இக்கண்காட்சி தொடர்ந்து நடைபெற ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இவரைத் தொடர்ந்து பேசிய, மாவட்ட ஆட்சியர் சமீரன் “நான் பள்ளியில் படிக்கும் போது என்னுடைய லட்சியம் என்ன என்று கேட்டிருந்தால் முதலில் ஓட்டுநராக வேண்டும் என கூறியிருப்பேன். திரைப்படங்களை பார்க்கும் போது போலீஸ், பிறகு திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என ஆசை இருந்தது. பள்ளி காலத்தில் தெளிவில்லாமல் யோசித்து வந்தோம். கல்வி என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறி வரும். ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற எப்போதும் தயாராக இருக்க வேண்டும். கல்வி கடன் வழங்க அனைத்து வங்கிகளும் முனைப்புடன் இருக்க வேண்டும்.” என்று கூறினார்.
அதேபோல, “கோவை மாவட்டத்தில் ரூ.350 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு வைத்துள்ளோம். அதன் முதற்கட்டமாக இன்று ரூ.28 கோடி கல்விக்கடன் வழங்கப்பட உள்ளது” என்றும் கூறினார்.
இவரை தொடர்ந்து பேசிய ஐபிஎஸ் அதிகாரி ரவி, “இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் கேவலமான விசயம் அல்ல. அரசியல்வாதிகளை விட கடினமாக உழைப்பவர்கள் யாரும் இல்லை.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,
“நியூஸ் 7 தமிழ் போன்ற நடுநிலையான தொலைக்காட்சி இது போன்ற கல்வி கண்காட்சியை முன்னெடுத்திருப்பது பாராட்டுகுரியது. சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஒரு நாளிக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் செல்போன் மாணவர்கள் உபயோகிக்கூடாது. அதற்கு மேல் சென்றால் கவனசிதறல் ஏற்படும். பெற்றோருக்கு மதிப்பு மரியாதையும் கொடுங்கள். உங்கள் விருப்படி செயல்படுங்கள்.” என்றும் கூறியுள்ளார்.
சிறப்புரையாற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி,
“கல்வி மருத்துவம்,தொழில் மூன்று துறைகளின் தலைநகராக கோவை உயர்ந்து நிற்கிறது. இதற்கு கோவை மக்களின் அயராத உழைப்புதான் காரணம். இந்த உழைப்புதான் கோவையை இந்த இடத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “முதல்வரின் உழைப்பில் 10 சதவீதம் கூட நாங்கள் உழைக்கவில்லை. தமிழகத்தில் கல்வி,மருத்துவத்தை மேம்படுத்த முதல்வர் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கொரோனோ காலத்தில் ரூ.3 கோடி அளவிற்கு நிவாரண உதவிகளை நியூஸ் 7 தமிழின் அன்புபாலம் முதல்வரிடம் ஒப்படைத்தது. நியூஸ் 7 வணிக நிறுவனம் மட்டும் அல்ல. சமூக அக்கறை கொண்ட செய்தி தொலைக்காட்சி என்பதை ஒவ்வொரு நிமிடமும் நிரூபித்து வருகிறது.” என்று கூறினார்.
மேலும், “நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் தியாக செம்மல் மற்றும் நான் இருவரும் சகோதர்கள் என்பதோடு மட்டுமல்ல 15 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி இருக்கிறோம். இளம் வயதில் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் என்ற இடத்திற்கு வளர்ந்துள்ள தியாகசெம்மலுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள். கல்வி சார்ந்த உதவிகளை எப்போதும் செய்ய தயாராக உள்ளோம். மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க வங்கிகள் மறுத்தால், மாணவர்களோ, கல்வி நிறுவனங்களோ எங்களிடம் கூறுங்கள் நாங்கள் பெற்று தருவோம்.” என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.