நிர்வாகத்திறமையற்ற அரசால் மக்கள் மின்வெட்டை சந்தித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் மின்தடையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியின்போது கோடைகாலத்தில் 17 ஆயிரத்து 120 மெகாவாட் மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கியதாக குறிப்பிட்ட அவர், நிர்வாகத்திறமையற்ற அரசால் மக்கள் மின்வெட்டை சந்தித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்தியதால் புதிய தொழிற்சாலைகள் வந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 2வது நாளாக மின் சேவை இல்லாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.








