அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் தரப்பிடம் அளிக்க பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னதாக, இந்த மனு உச்சநீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது கட்சி அலுவலகத்தின் சாவியை தன்வசம் ஒப்படைக்கக் கோருவதில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளார். கையாடல் செய்த ஒருவரிடம் அலுவலகச் சாவியை ஒப்படைக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார். பிறகு எப்படி அவர் அலுவலகத்திற்கு உரிமை கோருகிறார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்ததை அடுத்து, அக்கட்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகள் பிரிந்தன. அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலப் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, இபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.