கிராம நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாநிலங்களவை அதிமுக எம்பி தம்பிதுரை மீது தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டு, அருகிலுள்ள அரசு பள்ளிக்கு வழங்கக் கோரி சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம பொது நல சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதி கல்யாணசுந்தரம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பாக உரிய நோட்டீஸ் அளித்து, நிலங்களை அளவீடு செய்து அறிக்கை அளிக்க வருவாய்த்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
தம்பிதுரையின் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழகம் அருகில் உள்ள கிராம நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மின்சார துணை நிலையம் மற்றும் தனியார் பாதை , மாணவ மாணவிகள் தங்கும் விடுதி கட்டி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.







