அதிமுக தொண்டர்கள் தாக்கப்படுவதை பார்த்துக்கொண்டு தன்னால் சும்மா இருக்க முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சிலரை, அதிமுகவினர் விரட்டியடித்த சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் என்று தன்னைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் சசிகலா.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவரது அறிக்கையில், தொண்டர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான இயக்கமாக அதிமுக செயல்பட்டு வந்ததாகவும், தற்போதைய நிலையை பார்க்கும் போது, தொண்டர்கள் வெட்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களை மதித்து, அவர்கள் நலனில் அக்கறை காட்டினால்தான் இயக்கத்தின் மீது நல்ல எண்ணமும், நம்பிக்கையும் வரும் என தெரிவித்துள்ள அவர், அதிமுக தொண்டர்களான ஓமப்பொடி பிரசாத் சிங், ராஜேஷ் ஆகியோர் தலைமை கழகத்திலேயே தாக்கப்பட்டது வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இனியும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு தன்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் தம்மீது விழுந்த அடியாக கருதுவதாக தெரிவித்துள்ளார். தொண்டர்கள் இருந்தால்தான், அந்த இயக்கம் ஆணிவேராக தழைத்தோங்கும் என தெரிவித்துள்ள அவர், தலைவர்கள் காட்டிய வழியில் அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்தால்தான் எதிரிகளை வெல்ல முடியும் என்றும் சசிகலா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.