அதிமுக தற்போது 5 பணக்காரர்கள் கையில் உள்ளது என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனது அலுவலகத்தில், ஓ பன்னீர் செல்வம், ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜானகியின் ஏஜண்டாக ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டார். ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டார் என எடப்பாடி பழனிசாமி கூறுவது பொய். அவர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்றார்.
வரலாறும் தெரியவில்லை என்ன நடக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு புரியவில்லை என்ற அவர், எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பதட்டம் ஏற்பட்டுள்ளது என்று சாடினார். ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொது குழுவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பேசுவது இந்த கட்சியை ஒருங்கிணைப்பதாக தெரியவில்லை. அவர் சொல்வதை தொண்டர்கள் ஏற்கவில்லை.
ஒரு குடும்பத்தின் பிடியில் இந்த கட்சி சென்று விட கூடாது என கூறி வந்தது போல், தற்போது 5 பணக்காரர்கள் கையில் அதிமுக சென்று விடக்கூட்டாது. முழுமையான விசாரணைக்கு பிறகு ஜூலை 11 ஆம் தேதி காலை முதல் மாலை வரை அதிமுக தலைமை அலுவலகத்தின் வெளியேயும் அந்த சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை காவல் துறை வெளியிட்டால் மட்டுமே ஓ.பன்னீர் செல்வம் நிரபராதி என தெரியும்.
அதிமுகவில் கூட்டு தலைமையாக எல்லோரும் இருக்க வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாக உள்ளது தொண்டர்களின் நிலைப்பாடாக உள்ளது. யார் பிடியில் இந்த கட்சி இருக்கிறது என தொண்டர்களுக்கு தெரியும். பெரும் பணக்காரர்கள் சிலரால் இந்த கட்சி பாழ்பட்டு வருகிறது. அவர்கள் யார் என சொல்ல விரும்பவில்லை. ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த கட்சி பீடு நடை போட்டு வெற்றி பெறும்.
கூட்டு தலைமையாக செயல்படலாம் என ஓ.பன்னீர் செல்வம் கூறுவதில் என்ன தவறு உள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ரோட்டுக்கு போய்விட கூடாது என்பதால் நான் பேசவில்லை, என் தொண்டர்கள் ரோட்டுக்கு போய் விட கூடாது இந்த கட்சி நிர்கதி ஆகிவிட கூடாது என்பதால், அப்போதைய முதலமைச்சர் பழனிசாமியிடம் அதிமுக வரலாற்றை 20 நிமிடங்கள் தனியாக சந்தித்து எடுத்து சொன்னேன்.
அதன் அடிப்படையில் தான் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. ஓபிஎஸ் என்ன தியாகம் செய்தார் என்பது, எடப்பாடி பழனிச்சாமியின் மனசாட்சிக்கு தெரியும். சசிகலா மற்றும் தினகரன் அதிமுகவில் இருப்பது கட்சியை பலப்படுத்தும் என ஓபிஎஸ் திடமாக நம்புவதாகவும் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








