அதிமுக தொண்டர்களின் கட்சி, தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி என அதிமுக தலைவர்கள் முழங்குவதை அடிக்கடி கேட்டிருப்போம். இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் அது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என்ற சட்டவிதிகள் மாற்றத்தின் மூலம் நிர்வாகிகளிடம் இருந்த அதிமுக மீண்டும் அடிப்படை உறுப்பினர்களிடம் சென்றிருக்கிறது.
நகர்ப்புற பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி பூசல், ஒற்றைத் தலைமையை நோக்கிய குரல், முக்கிய நிர்வாகிகள் நீக்கம் என அதிமுகவின் செயல்பாடுகள் தொடர்ந்து விவாதப் பொருட்களாக இருக்கும் சூழலில் கூடியது அதிமுக செயற்குழு. அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்ததை போலவே திமுக அரசைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், யாரும் எதிர்பாராத வகையில் சட்டவிதிகளில் சில திருத்தங்களையும் மேற்கொண்டது அதிமுக செயற்குழு. அந்த சட்ட திருத்தம் தொண்டர்கள் தான் அதிமுக என்பதை உறுதி செய்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர், அடிப்படை உறுப்பினர்களே பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை வகுத்தார். அதன் பின் வந்த ஜெயலலிதாவும் அதே சட்டவிதிகளையே தொடர்ந்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இணைந்த பிறகு நடைபெற்ற முதல் செயற்குழு- பொதுக்குழுவில் அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படுவதாகவும் இவர்கள் இருவரையும் பொதுக்குழு உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என்று அதிமுக சட்டவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கட்சியின் உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதாக புகார் எழுந்தது. அதனை எதிர்த்து அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகள் தொடர்ந்து வழக்கு இன்றளவும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் தான் தற்போது நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் சிறப்பு தீர்மானங்களாக 3 சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காலத்திலிருந்த விதியின் படி கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை தேர்வு செய்வார்கள் என்ற முறை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களே ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்வார்கள் என்ற சட்டவிதி நீக்கப்பட்டிருப்பதால் நிர்வாகிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த அதிமுக தற்போது தங்கள் கையில் வந்திருப்பதை அதிமுகவின் ஒவ்வொரு அடிப்படை உறுப்பினரும் கொண்டாடிக் கொண்டாட தொடங்கியிருக்கிறார்கள்….
விக்னேஷ், நியூஸ் 7 தமிழ் சென்னை