தகுதி இல்லாதவர்கள் கட்சிப் பொறுப்புகளில் போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் மனுதாக்கல் செய்தனர். இதனிடையே வேட்புமனு வாங்க வந்த சிலரை அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து தொண்டர்கள் விரட்டியடித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் அதிமுக உட்கட்சித் தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக மக்களின் நலனுக்காக பாடுபட்டு வரும் கட்சி என்ற அடிப்படையில், தகுதியுடைய யார் வேண்டுமானாலும் பொறுப்புகளுக்கு போட்டியிடலாம். ஆனால், தகுதி இல்லாதவர்கள் கட்சிப் பொறுப்புகளில் போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.
ஜனநாயக முறைப்படி அமைதியான வழியில்தான் தேர்தல் பணிகள் நடந்து வருகிறது எனவும், அதைக் கெடுக்க கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் ஈடுபடுவதை தடுக்கவே புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட ஜெயக்குமார், யார் தூண்டுதலின் பேரில் இந்த பிரச்னைகள் நடைபெறுகின்றன என்பதை காவல்துறைதான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.