அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி சீல் வைத்தார். சட்டப்பிரிவு 145 இன் படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையகத்திற்குள் கூடியிருப்பது சட்டவிரோதம் என…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி சீல் வைத்தார். சட்டப்பிரிவு 145 இன் படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையகத்திற்குள் கூடியிருப்பது சட்டவிரோதம் என கோட்டாட்சியர் நோட்டீஸ் பிறப்பித்தார். கோட்டாட்சியருடன் 2 தாசில்தார்களும் உள்ளனர்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, திட்டமிட்டப்படி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.

அப்போது, தற்காலிக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டிருந்த அதேநேரத்தில் பிரசார வாகனத்தில் ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களின் புடை சூழ வந்தார்.

அப்போது, இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் பின்வாங்கினர். இதையடுத்து, பூட்டியிருந்த தலைமை அலுவலகத்தை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தை கைப்பற்றினர்.

இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு காவல் துறையினர் விரைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்கு அந்தப் பகுதி கொண்டுவரப்பட்டது. அதேநேரம், தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் பிரசார வாகனத்தில் அவரது ஆதரவாளர்கள் வைத்தனர்.

இதனிடையே, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக இபிஎஸ் தரப்பினர் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வருவாய் கோட்டாட்சியர், காவல் துறையினருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர், அதிமுக தலைமை அலுவகத்திற்கு காவல் துறையினர் பாதுகாப்புடன் கோட்டாட்சியர் வந்தார்.

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக அலுவலகத்தில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதிமுக தலைமையகத்திற்குள் கூடியிருப்பது சட்டவிரோதம் என அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர். இதையடுத்து, சிறிது நேரம் தர்ணாவில் ஓபிஎஸ் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து பிரசார வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.