பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்ப்பதாக அக் கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 22-வது சட்ட ஆணையம் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது பற்றி பொதுமக்கள், மத அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் தங்கள் கருத்துகளைப் பதிவுசெய்யும் வகையில், ஒரு மாதம் கால வரையரையுடன் ஜூலை 14-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல்வேறு மதங்கள், பிரிவுகள் உள்ள நாட்டில் ஒரே சட்டம் என்பது சரியாக இருக்காது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் கூறுகின்றன.
இந்நிலையில் சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொது சிவில் சட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் தொடர்பான தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம் என கூறினார்.பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது, அதை எந்த வடிவிலும் நிறைவேற்றக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






