அதிமுக முன்னாள் நிர்வாகி சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளனர்.
கடந்த ஜூன் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க கோரி அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி சண்முகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தடை விதிக்க மறுத்து விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்ற நிபந்தனையுடன், பொதுக்குழுவை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது.
ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கட்சியின் நிரந்தர அவை தலைவராகத் தமிழ் மகன் உசேனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், ஜூலை பதினொன்றாம் தேதி அடுத்த பொதுக் குழு கூடும் என்று அறிவித்ததாகவும் கூறி எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு எதிராகச் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அதேபோல ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூடுதல் மனுவும் தாக்கல் செய்திருந்தார். இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
அண்மைச் செய்தி: ‘நீதிமன்ற அறைக்குள் அரிவாளுடன் புகுந்த நபர்; துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தம்’
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் சாதகமான முடிவை பெரும் பட்சத்தில் சண்முகம் தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்ற அனுமதியுடன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு, ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவுக்குத் தடை கூறிய கூடுதல் மனுவையும் நிராகரித்தது.
இந்தப் பின்னணியில் சண்முகம் தாக்கல் செய்த பிரதான மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைக்கக் கூடாது என்று சண்முகம் தரப்பிலும், பன்னீர்செல்வம் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.








