அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று வழக்கமான நடைமுறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். பொதுக்குழுவை புறக்கணித்து அதிமுகவின் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்றார். அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த அவரது ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கிருந்த இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டனர். இதையடுத்து, சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அதிமுக அலுவலகத்திற்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ், நீதிபதி சதீஷ்குமார் முன் ஆஜராகி, மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதி, எம்.எல்.ஏ. தாக்கல் செய்த வழக்கு என்பதால் தலைமை நீதிபதி
ஒப்புதல் பெற்று, உரிய நடைமுறைகளை முடித்து, வழக்கமான முறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தார். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் தெரிவித்தார்.
-ம.பவித்ரா