ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக உள்ளனர். அதிமுகவில் இபிஎஸ் அணியின் சார்பில் முன்னாள் எம்எல்ஏவாக இருந்த கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுகிறது.
உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று அதன் படி வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும் எனவும் ஒப்புதல் கடிதங்களை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இதன்படி எடப்பாடி பழனிசாமியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவுக்கு, 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2501 பேர் ஆதரவு அளித்துள்ளனர். இந்தநிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்பிய ஆவணங்களை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தார்.
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கொடுத்த ஆவணங்களை சரி பார்த்த தேர்தல் ஆணையம், அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என அங்கீகாரம் அளித்தது. இதுதொடர்பான கடிதத்தை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனை திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு, ஈரோடு மாநகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவகுமாரிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுவை தக்கல் செய்யும் போது, தென்னரசுடன் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர். அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்த வேட்புமனுவில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையப்பமிட்ட படிவம் ஏ மற்றும் பி இணைக்கப்பட்டுள்ளது.
-யாழன்