அக்னிவீர் ஒரு தன்னார்வப் பணி என்று முன்னாள் ராணுவத் தளபதியும் மத்திய அமைச்சருமான வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
அக்னிவீர் ஒரு தன்னார்வப் பணி:
அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த திட்டம் தன்னார்வளர்களுக்கானது என குறிப்பிட்டார். விருப்பப்படுபவர்கள் மட்டுமே வரலாம் என தெரிவித்த அவர், வந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இதில் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ரயிலை எரித்தால் ராணுவத்தில் வேலை கிடைத்துவிடுமா?:
பேருந்துகளை, ரயில்களை எரிப்பவர்கள் இந்த பணியில் சேர தகுதி அற்றவர்கள் என தெரிவித்த வி.கே. சிங், இவ்வாறு எரித்தால் ராணுவத்தில் வேலை கிடைத்துவிடும் என்று யாராவது கூறினார்களா என்றார்.
ராணுவத்தில் பணியாற்றினால் சுயமாக நிற்கலாம்:
ராணுவத்தில் ஒருவர் 4 ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டால், அதன் பிறகு அவரது எதிர்காலத்தை பார்த்துக்கொள்ளும் திறன் அவருக்கே வாய்த்துவிடும் என குறிப்பிட்ட வி.கே. சிங், அவருக்கு யாருடைய ஆதரவும் தேவை இருக்காது என்றார்.
ராணுவம் வேலைவாய்ப்பு அளிக்கும் இடம் அல்ல என்றும் அது ஒரு கடையோ அல்லது நிறுவனமோ அல்ல என்றும் குறிப்பிட்ட ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி வி.கே. சிங், விருப்பப்படுபவர்கள் மட்டும் தன்னார்வத்தோடு அக்னிவீரர்களாக ராணுவத்தில் இணையலாம் என்றார்.
நேரத்தை வீணாக்காதீர்கள்:
முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்னிபாத் திட்டத்திற்கான பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலர் அனில் பூரி, அக்னிவீரர்களாக ராணுவத்தில் இணைய விரும்பும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு தங்கள் நேரத்தை வீணடிக்காமல் பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பயிற்சிகளை இப்போதே தொடங்குங்கள்:
உடல் ரீதியல் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகளை தற்போதே அவர்கள் தொடங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை:
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு இருக்கும் என்று தாங்கள் யூகித்ததாகத் தெரிவித்த அனில் பூரி, ஆனால், இளைஞர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு அரசு சொத்துக்களை சேதப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை என்றார். கோபத்தின் வெளிப்பாட்டுக்கும் அரசு சொத்துக்களை எரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றும் அனில் பூரி தெரிவித்துள்ளார்.












