தமிழகத்தில் மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.
அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை
தாண்டியது. இதன் காரணமாக அக்னி வெயிலின் உச்சம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே காணப்பட்டது. அதன்படி, அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4ஆம் தேதி முதலே வெயில் வாட்டியது. எனினும் ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல இடங்களில்
பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது.
அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் ஆகிய காரணங்களால்
தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அவ்வப்போது மழை
பெய்தது. இதனால், இந்த ஆண்டு அக்னி நட்சத்திர கோடைக்காலத்தில் முதல் 2
வாரங்களுக்கு வெப்பம் தணிந்தே காணப்பட்டது.
அடுத்த சில நாட்களுக்கு அனல் காற்று வீசியதால் மக்கள் அவதியடைந்தனர்.
மே 24ஆம் தேதி தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. நேற்று சென்னையில் 102.38 டிகிரி வெப்பம் பதிவாகி இருக்கிறது.
இருப்பினும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. எனினும் அடுத்த சில
நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








