மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் ஓய்வு பெற்ற பின்னரும் பல்கலை கழக பதிவாளர் முழு சம்பளத்துடன் பணியில் தொடர்வது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
முனைவர் மருதகுட்டி என்பவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைழகத்தில் பதிவாளர் பொறுப்பு பதவியை வகித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதியன்று தனது 60 வயதை பூரத்தி செய்துள்ளார். முறைப்படி இவர் அன்றைய தினம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஓய்வு பெறாமல் தொடர்ந்து பணியில் இருந்து வருகிறார். இது சட்ட விதிகளுக்கு புறம்பானது பேராசிரியர்கள் போர்கொடி தூக்கியுள்ளனர். இதுதொடர்பாக பல்கலை கழக பேராசிரியர்கள் முனைவர் சாமுவேல் அசிர் ராஜ் மற்றும் முனைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் அப்பல்கலை கழக துணைவேந்தர் முனைவர் பிச்சுமணிக்கு புகார் ஒன்றினை மனுவாக அனுப்பியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்து சாமுவேல் அசிர் ராஜ் கூறியதாவது, பல்கலை கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களது 60 வயதை பூர்த்தியடைந்த மாதத்தின் கடைசி நாளின் மதியத்துடன் தங்களது பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். ஆனால் இப்பல்கலை கழகத்தின் பணியாற்றி வரும் பதிவாளர் (பொறுப்பு) முனைவர் மருதகுட்டியின் 60ஆவது வயது மார்ச் மாதம் 20ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆனால் அவர் ஓய்வு பெறாமல் பல்கலைகழகத்தின் சார்பில் வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளை தொடர்ந்து பெற்று வருகிறார். இது விதிமுறைகளுக்கு புறம்பானது. அதுமட்டுமில்லாமல், பல்கலை கழகத்தின் சிண்டிகேட் எடுக்கும் முடிவும், நிதி ஆதாரங்கள் போன்றவை அவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது பல்கலைத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது மட்டுமல்ல. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் மாண்புக்கு குந்தகம் விளைக்கும் செயல் என்றார்.
இதுகுறித்து பல்கலைகழக துணைவேந்தர் கே பிச்சுமணி கூறியதாவது, பல்கலை கழக பதிவாளர் மருதகுட்டி பதிவாளராக இருந்தாலும், அவர் ஒரு பேராசிரியர். எனவே அவர் அந்த கல்வியாண்டின் கடைசி வரை பணியாற்றுவதில் தவறில்லை. இவர் வரும் ஜூன் மாதம் வரை பணியில் இருப்பார். அதன் பின்னர் ஓய்வு பெற்றுவிடுவார். பல்கலை கழகத்திற்கு புதிய பதிவாளர் நியமிப்பது தொடர்பான விளம்பரங்கள் மற்றும் மற்ற இதர பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன எனக் கூறினார்.