ரம்ஜான் பண்டிகையையொட்டி குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இஸ்லாத்தில் ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தினை இறைவனை நெருங்கும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். மேலும் இறைவனால் உலகிற்கு குர்ஆன் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்கும் இஸ்லாமியர்கள், ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ரம்ஜான் பண்டிகையையொட்டி, குடிமக்கள் அனைவருக்கும் குறிப்பாக நமது முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். ரமலான் மாத நிறைவில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, ஏழைகளுக்கு உணவு மற்றும் உணவு தானியம் வழங்குவதும் சிறப்பு அம்சமாக உள்ளது.
இந்த பண்டிகையின்போது மனித குலத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் நலிந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நம்மை அர்ப்பணிக்க உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இதயப்பூர்வ நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ரம்ஜான் பண்டிகை உண்மையான அர்ப்பணிப்பு, அறக்கொடை மற்றும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதன் கொண்டாட்டமாகும். இந்தப் பண்டிகை மக்களிடையே நட்புறவு, சகோதரத்துவம், அன்பு மற்றும் பரஸ்பர மரியாதையை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவில் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பண்டிகை நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் உணர்வை மேம்படுத்தும் என்று நம்புகிறேன். அனைவரும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படட்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.