ஆப்கானிஸ்தானில் இன்று ( டிச.11) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வறுமை மிகுந்த ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று ஃபைசாபாத்தில், 180 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலநடுக்கமானது ஃபைசாபாத்தில் இருந்து 151 கிலோ மீட்டர் தெற்கு – தென்கிழக்கில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.
கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 4,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அக்டோபர் 13, 15 மற்றும் நவம்பர் 21-ஆம் தேதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதனையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடரும் நிலநடுக்கங்களால் ஆப்கானிஸ்தான் மக்கள் பெரும் துயரை அடைந்து வருகின்றனர்.